தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 151 பேர் மீது வழக்கு: 147 வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. இருந்த போதிலும் ஒரு சிலர் வாகனங்களில் சென்றபடி இருக்கின்றனர். அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி யாரேனும் சாலையில் வந்தால் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் நகரில் மட்டும் 15 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தேவை இல்லாமல் வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து வருகின்றனர். தடையை மீறி வாகனத்தில் வந்ததாக திருவள்ளூர் நகரில் நேற்று முன்தினம் மட்டும் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு மாவட்டத்திற்கு உட்பட்ட  திருவள்ளூர், ஊத்துக்கோட்டை,  பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய ஐந்து போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடையை மீறி ஊர் சுற்றியதாக 151 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 147 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: