சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உள்பட தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு: ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம்,  மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உயர் நீதிமன்ற  தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை.

மறு உத்தரவு வரும் வரை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை. அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நீதிபதி அனுமதி பெற்று தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், அந்த வழக்கின் விசாரணை நடைபெறும் இடம்,  நேரடி விசாரணையா, காணொளி காட்சி மூலம் விசாரணையா எனதெரிவிக்கப்படும்.நிர்வாக அல்லது நீதிமன்ற அலுவல் தொடர்பாக சென்னை மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதியோடு, மிக அவசர வழக்காக இருந்தால் மட்டுமே கீழமை நீதிமன்றங்கள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.முன் ஜாமீன் வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் உயர் நீதிமன்றம் வருவதற்கு பதிலாக அந்தந்த எல்லைக்கு உட்பட்ட மாவட்ட முதன்மை அல்லது அமர்வு நீதிமன்றங்களை அணுகலாம்.மிகவும் அவசியமாக முன் ஜாமீன் வேண்டுமானால், மனுதாரர் அல்லது வக்கீல், வழக்கு தொடர்புடைய எல்லைக்குட்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றங்களை முதலில் அணுக வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: