சென்னை: கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் அதன் பாதிப்பையும் கருத்தில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழக எம்பிக்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை அரசுக்கு நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி அறிவிப்பு:‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூபாய் 1 கோடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழக சட்டமன்றத்தில் உள்ள 7 காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணிசமான தொகையினை வழங்குவார்கள்’ எனத்தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி : கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது. தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன்.