சென்னை: ஆர்.கே.நகரில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் நேபாளத்தில் இருந்து சென்னை திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை அழைத்து வர வேண்டும் என உறவினர்கள் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பாரதி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 16ம் தேதி, ஆண்கள், பெண்கள் உட்பட 37 பேர் காசி, அலகாபாத், அயோத்தி, நேபாளம், கயா, புத்தகயா ஆகிய பகுதிகளுக்கு 15 நாள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். கொரோனா பீதியால் சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு 23ம் தேதி சென்னைக்கு நேபாளில் இருந்து புறப்பட்ட போது, நேபாள அரசு இவர்களை அனுப்ப தடைவிதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.