திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா? என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை மூலம் தொற்று நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.