மும்பை: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று நேரில் ஆஜரானார். யெஸ் வங்கியில் 44 பெரும் நிறுவனங்களுக்கு ₹34 ஆயிரம் கோடி வரை அளித்த கடன் திரும்பச் செலுத்தப்படாமல் வராக் கடனானது. இதனால் செயல்பட முடியாமல் முடங்கிய இந்த வங்கி, கடந்த 5ம் தேதி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த வங்கியின் நிறுவனத் தலைவர் ராணா கபூர் ₹4,300 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, யெஸ் வங்கியில் இருந்து கடன் பெற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி வருகிறது. இந்த வங்கியிடம் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ₹550 கோடி வரை கடன் பெற்றுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.