திருப்புவனம்: கொந்தகை அகழாய்வு தளத்தில் மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்.19ம் தேதி அகரம், கொந்தகை, கீழடியில் துவங்கியது. கொந்தகையில் சுரேஷ் என்பவரின் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் 4 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. பண்டை காலத்தில் இறந்தவர்களை மட்டுமின்றி, பராமரிக்க முடியாத முதியவர்களையும் பெரிய பானைகளுக்குள் உணவு, தண்ணீர் வைத்து புதைப்பதும் வழக்கத்தில் இருந்துள்ளது. கொந்தகையில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் இதுவரை எந்த வகையை சேர்ந்தது என கண்டறிய முடியவில்லை. எனவே தமிழக தொல்லியல் துறையினருடன் மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணு பிரிவும் இணைந்து இதை கண்டுபிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பேராசிரியர் பாலகிருஷ்ணன் (உயிரியல் பிரிவு), புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் உள்ளிட்டோர் நேற்று காலை முதல் கொந்தகையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமர்ந்த நிலையில் ஒரு பானையினுள் மனித எலும்புக்கூடு கால்கள் மட்டும் நீட்டிய நிலையில் கண்டறியப்பட்டது.