சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை ஒத்திவைத்து மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான பணிகளை மார்ச் இறுதி வரை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 6ம் தேதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதற்கிடையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான கருத்துகேட்பு கூட்டங்கள் கடந்த 10 வரை நடந்தது. இதில் பெறப்பட்ட கருத்துகளை பரிசீலனை செய்து வார்டு மறுவரையறை இறுதி செய்யப்பட்டது.