மத்திய அரசின் பி, சி பிரிவு ஊழியர்கள் 50% பேர் வீட்டிலிருந்தே பணி செய்யலாம்.. பணிக்குவருவோர் பணிநேரத்தை மாற்றிக் கொள்ளலாம் : மத்திய அரசு அதிரடி

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும் என்று மத்திய பணியாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.  மத்திய அரசு அலுவலகங்களில் பி, சி பிரிவு ஊழியர்கள் 50% பேர் பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என்றும் 50% வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்றும் மத்திய அமைச்சகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிக்கு வரும் ஊழியர்களின் பணிநேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் இது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: