சென்னை: போலியான பிஎச்.டி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்த மோசடி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்திருக்கிறது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிவரக்கூடிய பேராசிரியர்களில் பெரும்பாலானோர்கள் போலியான கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகார்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரு கடிதம் ஒன்றினை அனுப்பியது. அதாவது அனைத்து கல்லூரிகளும் தங்களுடைய கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களின் கல்வி தகுதி, சான்றிதழின் உண்மை தன்மை உள்ளிட்டவற்றை ஆராய வேண்டும் என்றும், அதற்கு மார்ச் 16 தேதி வரை நேரம் அளித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் மார்ச் 16ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளிலும் ஆய்வு செய்ததில் 450க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போலியான பி.எச்.டி. பட்டங்கள் அளித்து பணியில் சேர்ந்திருப்பது அம்பலமாகியுள்ளது.