சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவற்றை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்தவித நவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார்.