புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து பாஜ எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பாஜ நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் சிறப்பாக செயல்படும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், விமான பணியாளர்கள் ஆகியோரை பிரதமர் புகழ்ந்து பேசினார். பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கூட்டத்துக்கு பின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாகவும் அயராதும் பணியாற்றிய மருத்துவர்களின் சேவையை பிரதமர் பாராட்டியுள்ளார். வைரசுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊடகங்களையும் பிரதமர் புகழ்ந்தார்.