ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கானது மே 17ல் ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்வு: மே 1ம் தேதி பதிவு தொடக்கம்

நாகர்கோவில்: ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு மே 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை பதிவு நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் உட்பட நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வான ஜெஇஇ அட்வான்ஸ் மே மாதம் 17ம் தேதி தாள்-1 காலை 9 மணி முதல் 12 மணி வரையும், தாள்-2 பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெஇஇ மெயின் தேர்வு முடிவு வந்த பின்னர் மே 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். மே 1ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் பதிவு 6ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும். மே 7ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.2800. பட்டியல் இனத்தவர், மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவிலும் உள்ள மகளிர் ஆகியோருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உண்டு. சேவை கட்டணம் தனியே செலுத்த வேண்டும்.

மே மாதம் 12ம் தேதி முதல் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 8ம் தேதி வெளியாகும். ஆன்லைன் தேர்வுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்கள் அடங்கியவற்றில் இருந்து மல்டிபிள் சாய்ஸ் உட்பட அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறைந்த பட்ச மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே தர வரிசை பட்டியலில் இடம்பெறுவர்.பி.டெக் 4 ஆண்டுகள், பி.எஸ். 4 ஆண்டுகள், பி.ஆர்க் 5 ஆண்டுகள், இரட்டை டிகிரி பி.டெக்-எம்.டெக் 5 ஆண்டுகள், இரட்டை டிகிரி பி.எஸ்-எம்.எஸ் 5 ஆண்டுகள், ஒருங்கிணைந்த எம்.டெக் 5 ஆண்டுகள், எம்.எஸ்சி படிப்பு 5 ஆண்டுகள் ஆகும். மேலும் விபரங்களுக்கு https://jeeadv.ac.in என்ற இணையதளத்தில் இருந்தும் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

Related Stories: