வேலூர்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேட்ச் ஒர்க்கை தொடர்ந்து மேம்பாலங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை-பெங்களூரு இடையே வேலூர் மாவட்டம் வழியாக தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது 6 வழிச்சாலையாக விரிவாக்கம் பெற்றது. இந்த சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் பயணிகள் வாகனங்களும், சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த பரபரப்பான நெடுஞ்சாலையாக விளங்கி வருகிறது. இச்சாலையில் தற்போது கிருஷ்ணகிரி முதல் வாலாஜா வரை பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து மேம்பாலங்களில் பக்கவாட்டில் முளைத்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. இதையடுத்து சாலையில் சிறிய அளவிலான பழுதுகள் கூட கண்டறியப்பட்டு முழுமையாக பேட்ச் ஒர்க் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியின் இடையே சாலையின் நடுவில் எல்இடி விளக்குகளும் அமைக்கப்பட்டு வருகிறது.