டெல்லி: கொரோனா வைரஸ் பற்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை கூற மருத்துவ குழு உள்ளது என பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது, கேப்டன் குயின்டான் டி காக் தலைமையில், இந்த மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 12-ம் தேதி தர்மசாலாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2-வது போட்டி 15-ம் தேதி லக்னோவில் உள்ள ஏ.பி. வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், 3-வது போட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வரை 50 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.