சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்ததுமே ஹாங்காங்கிலிருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு மட்டுமே முதலில் சோதனை நடந்தது. தற்போது அது படிப்படியாக அதிகரித்து சீனா, ஹாங்காங், தாய்லாந்து, குவைத், சார்ஜா, மலேசியா, இத்தாலி, ஈரான் உள்பட 12க்கும் அதிகமான நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் சுமார் 60 விமானங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அந்த நாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை வரும் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைந்தது. பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் ஹாங்காங் செல்லும் விமானம் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு முதல் குவைத் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் திங்கள் முதல் திருச்சி, மதுரை, கோவை செல்லும் உள் நாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மட்டும் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.