திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் இன்று (8ம் தேதி) தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் திரளாகக் குவிந்துள்ளனர். நாளை இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித் திருவிழா கடந்த பிப்.28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் சுவாமி சண்முகர், பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை வந்தடைந்தார். நேற்று காலை சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் அலைவாயு கந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயிலை சேர்ந்தனர்.