திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று, உலக மகளிர் தினத்தையொட்டி யோகா ஆசிரியை தலை முடியில் கயிறு கட்டி காரை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருக்கு டிஎஸ்பி அண்ணாதுரை பரிசு வழங்கி பாராட்டினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் நேற்று, யோகா ஆசிரியை தலை முடியில் கயிறு கட்டி காரை இழுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் கே.வலு முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் எம்.நித்யா வரவேற்றார். நேரு யுவகேந்திரா கணக்காளர் ஜி.கண்ணகி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, யோகா ஆசிரியை ஆர்.கல்பனா, தனது தலை முடியில் கயிற்றை கட்டி காரை இழுத்து சென்றார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன் இருந்து தொடங்கி டவுன் காவல் நிலையம் வரை சுமார் 300 மீட்டர் தூரம் காரை இழுத்து சென்று கல்பனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.