சென்னை: நடிகர் அஜித் குமார் இணையதளத்தில் எந்த பக்கத்திலும் இணையவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அஜித் குமாரின் கையெழுத்துடன் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த அறிக்கை போலியானது என்று, அஜித் குமார் சார்பில் நேற்று அவரது வழக்கறிஞர் எம்.எஸ்.பாரத் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: நடிகர் அஜித் குமாரின் சட்ட ஆலோசகர்கள் நாங்கள். இந்த நோட்டீசை அவரது அறிவுறுத்தலின் பேரிலும், அவரது சார்பாகவும் வெளியிடுகிறோம். நேற்று முன்தினம் அஜித் குமார் வெளியிட்டதாக ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது அவரது கவனத்துக்கு வந்துள்ளது. அதில், சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் இருக்கிறது. அந்த கடிதம் அஜித் குமார் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு, அவரது போலி கையெழுத்தையும் இணைத்து இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சி அளிக்கிறது.