திருக்கோவிலூர்: கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாசி தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழையூரில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 27ம் தேதி வாஸ்து பூஜை நடந்தது. மறுநாள் 28ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் நகர வீதிகளில் வீதியுலா வந்தார்.