கோவை: பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறியும் நவீன கருவி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் எப்படி உள்ளது? என்பதை கண்டறிய காதுகேட்கும் திறன் அறிதல் கருவி வாங்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த அறிமுக விழாவில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் நவீன கருவியை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 2 அல்லது 3 குழந்தைகள் கேட்கும் திறன் குறைபாடுடன் பிறக்கின்றன. சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். 10 சதவீத குழந்தைகள் மட்டும் பரம்பரை ரீதியாக செவித்திறன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சிறுவயதிலேயே இதை கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் அந்த குழந்தைகளும் செவித்திறன் பெற முடியும்.