குன்னூர்: குன்னூர் மலை ரயில் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளதால் நேற்று 7 சுற்றுலா பயணிகள் மட்டுமே மலை ரயிலில் பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடு மற்றம் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், உள்ளூர் வாசிகள் மற்றும் அதிகமான சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மார்ச் 1ம் தேதில் முதல் மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே துறை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. இதற்கு முன் குன்னூர் ஊட்டி இடையே 35 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது 80 ரூபாயாகவும், முதல் வகுப்பிற்கான கட்டணம் 185 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.