நந்தம்பாக்கம் குடிநீர் திட்ட பணிகள் நிறைவு கட்டணம் செலுத்தியவர்கள் புதிய இணைப்பு பெறலாம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நந்தம்பாக்கம் குடிநீர் திட்ட பணிகள் நிறைவுபெற்று புதிய குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. வீட்டு இணைப்பு குழாய்கள் வீட்டின் சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால்வாய் வரை கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பின் உரிமையாளர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலியவற்றை இன்றைய தேதி வரை கட்டிய விவரங்களை பணிமனை உதவி பொறியாளரிடம் ஒப்படைத்து அதன்பின் சுற்றுச்சுவர் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அருகில் உள்ள தங்கள் வீட்டு இணைப்பை தாங்கள் அமைத்துள்ள குடிநீர் தொட்டி மற்றும் கைபம்புகளுக்கு தங்கள் செலவில் இணைத்துக்கொள்ள வேண்டும். இப்பணி முடிவுற்றதை சென்னை குடிநீர் வாரியத்தின் பணிமனைக்கு தெரிவிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இணைப்பிற்காக தனிகட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதர தகவலுக்கும், உதவிக்கும் உதவி பொறியாளர், பணிமனை-158 -  81449 30158 மற்றும் துணை பகுதி பொறியாளர் -  81449 30235, பகுதி பொறியாளர்-12, -  81449 30912 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: