6-வது நாளாக தொடரும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம்; தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு சார்பில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.

வேலைநிறுத்தப்போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ளதால் கேன் குடிநீர் உற்பத்தி முடங்கி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் கேன்குடிநீரை ரூ.60 வரை விற்பனை செய்து வருகின்றனர். வேலைநிறுத்த போராட்டம் நீடிப்பதால் கேன் குடிநீர் விலை மேலும் அதிரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: