சென்னை: சென்னையில் வருகிற 6ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.