கடலூர்: கடலூர் மாவட்ட பகுதி கடற்கரை கிராமங்கள் சுமார் 50 கிலோ மீட்டர் நீளம் பரப்பளவு கொண்டது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆமைகள் கடற்கரை பகுதிக்கு முட்டையிட வருவதும் பின்னர் கடலுக்கு செல்வதும் வழக்கம். இதனால் சம்பந்தப்பட்ட காலங்களில் ஆமைகள் வருகை கடற்கரை கிராமங்களில் அதிகளவில் இருக்கும் என்பதால் படகுகளில் மீன்பிடிக்கச் செல்வோர் மற்றும் இதர பணிகளில் ஈடுபடுவோர் ஆமைகளின் நலன் காக்க வேண்டும் என வனத்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு வகைகளில் ஆமைகளின் இறப்பு தொடர்கதையாகி வருகிறது. இதில் டால்பின் வகை மீன்களும் அடங்கும். கடலூர் சில்வர் பீச் கடற்கரையில் நேற்று சுமார் 45 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் ஆமை கரையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆமையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் புதைத்தனர்.