பதற்றத்தில் இருந்து மீண்டது மத்திய அரசு: வடகிழக்கு டெல்லியில் கலவரம் சற்று தணிந்தது; இயல்பு நிலைக்கு திரும்பும் பொதுமக்கள்

புதுடெல்லி: டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு அந்த பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும்  நடந்தன.

சில இடங்களில் கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்த 2 நாட்களும் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை) கலவரம் நீடித்தது. கலவரத்தில் 210க்கும்  மேற்பட்டவர்கள் காயம்டைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம் பேர் குண்டு காயம் அடைந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் டெல்லி கலவர பலி உயர்ந்தபடி உள்ளது. தற்போதைய நிலவரப்படி கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. இதற்கிடையே, கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு டெல்லி தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. வடகிழக்கு டெல்லி பகுதியான ஜாப்ராபாத், மஜ்பூர், பாபர்பூர், மற்றும் சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இயல்பாக பத்திரிக்கை வாங்குவது,  பேருந்துகளுக்கு காத்திருப்பது, பல தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியே சென்று வருவது உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் மாநில அரசும், மத்திய அரசு சற்று நிம்தியாகியுள்ளது.

Related Stories: