மதுராந்தகத்தில் அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி

மதுராந்தகம்:  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒரத்தி அருகே உள்ள வடக்கு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தர்மேஷ்(9). அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் இரு மகன்கள் ராஜா(12), ஆகாஷ்(11). இவர்கள் 3 பேரும் வட மடிப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தனர். 3 பேரும் வீட்டில் சொல்லாமல் அங்குள்ள குளத்தில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதறிய பெற்றோர் குளக்கரை பகுதியில் சென்று தேடினர்.

 அப்போது குளக்கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த உடைகள், செருப்புகள் கிடந்துள்ளன. இதையடுத்து பொதுமக்கள் குளத்தில் இறங்கி சிறுவர்களை தேடினர். அப்போது, 3 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்களின் உடலை பார்த்த பெற்றோர் மற்றும் கிராமத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.   இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து 3 சிறுவர்களின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Related Stories: