கடலூர், காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல்: உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை

கடலூர்:  உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிவந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை கண்காணிக்க, கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, கடலூரில் செயல்பட்டுவரும் 50க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் பொதுப்பணித்துறை (நிலத்தடி நீர்) செயற்பொறியாளர் தமிழ்செல்வி, கடலூர் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க, சம்பந்தப்பட்ட நிலையங்கள் பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த அனுமதியை பெறாமல் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது தெரியவந்தது.

இதில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் மணவெளி, எம்.புதூர் அரிசிபெரியாங்குப்பம், வழிசோதனைப்பாளையம்ரோடு, காரைக்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும், நேற்று நடைபெற்ற சோதனையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை, கங்கமநாயக்கன்பாளையம், புதுக்கடை, சிங்கிரிகுடி, திருமாணிக்குழி, சங்கொலிகுப்பம் ஆகிய இடங்களில் 12 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளோம் என்றார். மேலும், அதேபோல் காஞ்சிபுர மாவட்டம் குன்றத்தூரில் உள்ள 4 குடிநீர் ஆலைகளுக்கும்  ஸ்ரீபரம்பத்தூர் கோட்டாச்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: