ஆலந்தூர்: ஆலந்தூர், மீனம்பாக்கம் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை ஸ்ரீபெரும்பூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில்வே துறையினரால் தொடங்கப்பட்ட பல்வேறு கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆலந்தூர் பச்சையம்மன் ரயில்வே கேட் சுரங்கப்பதை, ஏ.ஜெ.எஸ். நிதி பள்ளி அருகில் நடை மேம்பாலம், மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி அருகில் சுரங்கப்பாதை ஆகிய பணிகள், பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்கள் மற்றும் நலச்சங்கத்தினர் டி.ஆர்.பாலு எம்பியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில், டி.ஆர்.பாலு எம்பி, தென் மண்டல ரயில்வே துணை மேலாளர் மகேஷ் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணநிதி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.