பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் தாராபுரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு வங்கியை பூட்டிவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வங்கியை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த வங்கி லாக்கர் மற்றும் வாடிக்கையாளர் லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. புகாரின்படி காமநாயக்கன்பாளையம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வங்கியின் பின்புறமுள்ள ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் நுழைந்து லாக்கர்களை துளையிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் சிசிடிவி கேமராக்களை உடைத்து, ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. துளையிடப்பட்டதால் லாக்கர்களை சாவி மூலம் திறக்க முடியவில்லை. இதனால் எவ்வளவு பணம், நகை கொள்ளை போனது என கணக்கிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜாம் ஆன லாக்கர்களை திறப்பதற்காக கோவையில் உள்ள வங்கி தொழில்நுட்ப குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.