சென்னை: டெல்லி வந்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க ஒப்புதலை பெற்றது என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததற்கு மாநிலத்தின் சார்பில் நன்றி தெரிவித்தேன். மேலும், கல்லூரிகள் தொடர்பான அனைத்து பணிகளும் விரைவில் துவக்கப்படும் என அவரிடம் உறுதி அளித்துள்ளேன்.