திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டுக்குட்பட்ட எண்ணூர், நேதாஜி நகரில் அம்மா உணவகம் உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், அம்மா உணவக கழிவுநீரை, கீழ்நிலை தொட்டியில் சேமித்து, பின்னர் கழிவுநீர் அகற்று லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த கழிவுநீர் தொட்டி நிரம்பியது. ஆனால், லாரி மூலம் இதை அகற்றாததால், தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி அம்மா உணவகம் முன்பு தேங்கியது. இதனால், உணவகத்துக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.