சென்னை: தீவிரவாதிகள் புகுந்தால் பணயக் கைதிகளை மீட்பது எப்படி என்பது தொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிவிரைவு படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 16 இடங்களில் தீவிரவாத தாக்குதலுக்குள்ளான அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறையில் இருந்து வந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அச்சுறுத்தலுக்கு உரிய இடங்களில் ஒன்றான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான மார்க்ட்ரில் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் தீவிரவாதியை மீட்க ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 4 தீவிரவாதிகள் நோயாளிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதையும், அவர்களிடம் இருந்து அதிரடியாக எப்படி காப்பாற்றுவது என்பதையும் நிகழ்த்தி காட்டினர். மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் முதலில் தனியார் காவலாளிகளை சுட்டுவிட்டு வேகமாக மூன்றாவது தளத்திற்கு செல்கின்றனர்.