தீவிரவாதிகள் புகுந்தால் பணயக் கைதிகளை மீட்பது எப்படி?: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒத்திகையில் ஈடுபட்ட அதிவிரைவு படை வீரர்கள்!

சென்னை: தீவிரவாதிகள் புகுந்தால் பணயக் கைதிகளை மீட்பது எப்படி என்பது தொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிவிரைவு படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 16 இடங்களில் தீவிரவாத தாக்குதலுக்குள்ளான அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறையில் இருந்து வந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அச்சுறுத்தலுக்கு உரிய இடங்களில் ஒன்றான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான மார்க்ட்ரில் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் தீவிரவாதியை மீட்க ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 4 தீவிரவாதிகள் நோயாளிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதையும், அவர்களிடம் இருந்து அதிரடியாக எப்படி காப்பாற்றுவது என்பதையும் நிகழ்த்தி காட்டினர். மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் முதலில் தனியார் காவலாளிகளை சுட்டுவிட்டு வேகமாக மூன்றாவது தளத்திற்கு செல்கின்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை சுட்டுவிட்டு தீவிரவாதியை மீட்டு 3வது தளம் முழுவதையும் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். நோயாளிகளையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து கொள்கின்றனர். இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. அடுத்த சில வினாடிகளில் அங்கு வரும் அதிவிரைவு படையை சேர்ந்த 35 வீரர்கள் மருத்துவமனையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்கின்றனர். அடுத்து சில நிமிடங்களில் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டு மருத்துவமனையின் பின்பக்கம் வழியாக 3வது மாடிக்குள் நுழைகின்றது அதிவிரைவுப்படை. மூன்றாவது தளத்தில் மோப்ப நாயுடன் பதுங்கி சென்று அதிரடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இறுதியாக அனைத்து தீவிரவாதிகளையும் தீர்த்து கட்டிவிட்டு நோயாளிகளை மீட்கின்றனர். 5 விஜயகாந்த் படங்களை பார்த்தது போன்று இருந்தது தமிழக காவல்துறையினரின் அதிரடியான இந்த மார்க்ட்ரில். தொடர்ந்து, பாதுகாப்பு ஒத்திகை என்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தன அங்கு நடைபெற்ற காட்சிகள்.

Related Stories: