சென்னை: மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில்வே தலைமையகம் முன்பு ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சுமார் ஆயரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஊழியர்கள் தங்களுக்குள் தொழிற்சங்கத்தை அமைத்தனர். இதனால், 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தொழிலாளர் துறையின் துணைஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.