டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

சென்னை: காவிரி படுகையை 2 மண்டலங்களாக பிரித்து, 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்தாண்டு அனுமதி வழங்கியது. ஓஎன்ஜிசி, வேதாந்தா, ஐஓசி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி  வழங்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான 5வது ஏலத்துக்கான அறிவிப்பு கடந்த  ஜனவரி 15ம் தேதி வெளியிடப்பட்டது.

மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமம் இந்த ஏலத்தில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில்,  சேலம் தலைவாசல் அருகே கடந்த 9ம் தேதி நடந்த விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதற்காக சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்தார். மேலும் சட்டம் கொண்டு வருவது குறித்து வேளாண் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஆனாலும் காவிரி படுகையில் நடந்து வந்த ஹைட்ரோ கார்பனுக்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தப்படாததால், விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் கடந்த 14ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது. 20ம்  தேதியுடன் இந்த கூட்டம் நிறைவடைய உள்ளது. இந்த கூட்ட தொடரிலேயே, சிறப்பு வேளாண் மண்டலத்துக்கான சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் மாலை 5 மணியளவில் தமிழக அமைச்சரவை  கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

அமைச்சரவையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கவும் ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சட்டமசோதா கூட்டத்தொடரின் கடைசி 20ம் தேதி(நாளை) முடியவுள்ளதால் அடுத்த கூட்டத்தொடரில் சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: