சென்னை: நட்சத்திர ஓட்டல்களுக்கு குறைந்த சொத்து வரி வசூலித்ததால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மக்கள் சட்ட உரிமை கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் சிறிய அளவில் வீடு கட்டி, அதற்கான கடனை செலுத்தி வரும் மக்களுக்கு அதிக சொத்து வரியை விதிக்கும் மாநகராட்சி, நட்சத்திர ஓட்டல்களுக்கு குறைந்த அளவில் சொத்து வரி விதிக்கிறது. ஒருநாள் இரவு தங்குவதற்காக ₹3 ஆயிரம் முதல் ₹4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர ஓட்டல்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை மட்டுமே சொத்து வரி விதிக்கப்படுகிறது.அறைகளின் கட்டண விவரங்களை ஓட்டல்கள், தங்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ள போதும், அதை விட மிகக் குறைவான கட்டணங்களை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது.இதேபோல, திருமண மண்டபங்கள், ஒரு திருமணத்துக்கு ₹5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக கூறி வரி விதிக்கப்படுகிறது.