புதுடெல்லி: ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா 2,500 கோடி, ஏர்டெல் 10,000 கோடி, டாடா குழுமம் 2,190 கோடி செலுத்தியதாக, தொலைத்தொடர்பு துறை தெரிவித்தது. அதேநேரத்தில், தவணை முறையில் ஒரு பகுதி தொகையை மட்டும் செலுத்த அனுமதி கோரிய வோடபோன் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் சேர்த்து 1.47 லட்சம் கோடியை வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த கடந்த ஜனவரி 15ல் உத்தரவிட்டது. தொகையை செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் முழு தொகையையும் நிறுவனங்கள் செலுத்த உத்தரவிட்டது.