புதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் கவர்னர் கிரண்பேடி டெல்லியில் முகாமிட்டுள்ளார். புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி வகித்து வருகிறது. தனது அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு கவர்னர் கிரண்பேடி மூலம் முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஆளுங்கட்சியினர் அவ்வப்போது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனிடையே நடந்து முடிந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிறப்பு சட்டசபை கூட்டம் முடிந்த கையோடு முதல்வர் நாராயணசாமி டெல்லி விரைந்தார்.