ஊட்டி: கோத்தகிரி அருகேயுள்ள கடகோடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி வனப்பகுதியில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை, காட்டுமாடு, கரடி மற்றும் காட்டு பன்றி போன்றவைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வருகின்றன. இதனால், அடிக்கடி மனித - விலங்கு மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கால்நடை மருத்துவரை வரவழைத்து இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்விற்குட்படுத்தினர்.