புதுடெல்லி: வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தவகல் வெளியிட்டிருந்தார். வல்லபாய் படேலுடன் நெருங்கி பணியாற்றிய மூத்த அரசு அதிகாரி வி.பி மேனனின் வாழ்க்கை வரலாறு பற்றி நாராயணி பாசு என்பவர் புத்தகம் எழுதியுள்ளார். இதை ஜெய்சங்கர் வெளியிட்டார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முதல் அமைச்சரவை பட்டியலில் படேலின் பெயர் இடம் பெறுவதை நேரு விரும்பவில்லை என்பதை இந்த புத்தகத்தை படித்தது அறிந்து கொண்டேன்,’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா, ‘இது கட்டுக்கதை. இது போன்ற போலி செய்திகளை பரப்புவது வெளியுறவு அமைச்சரின் வேலை இல்லை. இந்த பணியை பாஜ ஐ.டி பிரிவினரிடம் விட்டு விட வேண்டும்,’ என கடுமையாக விமர்சித்தார். இதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள ஜெய்சங்கர், ‘சில வெளியுறவு அமைச்சர்கள் புத்தகத்தை படிக்கின்றனர். இதேபோல், சில பேராசிரியர்களும் படிப்பது, நல்ல பழக்கமாக இருக்கலாம். நான் நேற்று வெளியிட்ட புத்தகத்தையே படிக்க பரிந்துரைக்கிறேன்,’ என குறிப்பிட்டார்.