சென்னை: போரூர் ஏரியில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கோடை காலத்தில் பயன்படும் போரூர் ஏரியின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை குவியலாக காட்சியளித்து வருகிறது. இது சம்பந்தமான செய்தி பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் ராமகிருஷ்ணன் மற்றும் சாய்பால் தாஸ் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும், மாநில அரசு உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம் நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிப்பதுடன், குப்பையை சேகரித்து அறிவியல் பூர்வமாக திடக்கழிவு மேலாண்மை செய்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.