புதுடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்தார். மத்திய அமைச்சர்களை சந்தித்த பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்தபோது, ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் 2017-18 முதல் 2019-2020க்கான செயலாக்க மானியத்தொகை ரூ.2 ஆயிரத்து 29 கோடியும், அதேப்போல் 2019-20க்கான அடிப்படை மானியத் தொகை ரூ.4 ஆயிரத்து 345 கோடியும் என மொத்தம் ரூ.6 ஆயிரத்து 374.6 கோடி தொகையை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் கோவை விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு நேரடியாக காலை நேரத்தில் விமான சேவை தொடங்கவும், இதேப்போல் பன்னாட்டு விமான சேவையாக கோவை முதல் துபாய் நாட்டுக்கு விமான சேவை வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.