சென்னை : சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாமல் மேயர் பதவியை பிடிக்க தான் ஆர்வம் காட்டுவதாக அரசியல் கட்சிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் தூங்கிக் கொண்டிருப்பதா என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொத்து வரியை வசூலிக்க விதிகளை வகுக்க மாநகராட்சிகளுக்கு உத்தரவிடக் கோரி விபிஆர் மேனன் எனபவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை அமல்படுத்தாமல் நிறுத்திவைக்க முடிவெடுத்தது ஏன் என்றும் கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் அரசு தூங்கிக் கொண்டியிருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாதவர்கள் மேயர் பதவியை பிடிப்பது என்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் 20 ஆண்டுகளில் 4 முறை சொத்து வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் வரியை உயர்த்தாததால் வெளியூர்காரர்கள் சென்னையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அப்போது குறிப்பிட்டனர். எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.