சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு புகாரை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 பேருக்கு பதிலாக தகுதிவாய்ந்த நபர்கள் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 19ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அண்மையில் அம்பலமானது. இதனையடுத்து முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 தேர்வர்களுக்கு பதிலாக தகுதி வாய்ந்த நபர்களை சேர்ந்து புதிய தரவரிசை பட்டியலை டி.என்.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தரவரிசை அடிப்படையில் தேர்வாகியுள்ள தேர்வர்கள் வரும் 18ம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.