தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவ கழிவுகள் எரிக்கப்படும் சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே உள்ள காலங்கிளக்கில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கழிவுகள் வளாகத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவது மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.