கள நிலவரத்தை கண்டறிய ஜம்மு - காஷ்மீருக்கு வெளிநாட்டு பிரதிநிதிகளின் 2வது குழு பயணம்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, தற்போது அங்கு நிலவி வரும் சூழ்நிலையை கண்காணித்து வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் 2வது குழு அங்கு சென்று அடைந்தது. இக்குழுவில் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த போலந்து, பல்கெரியா மற்றும் செக் குடியரசு நாடுகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். அங்கு அவர்கள் வடக்கு காஷ்மீர் சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச உள்ளனர்.

பின்னர் ஸ்ரீநகர் சென்று ஊடகப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை சந்திக்க உள்ளனர். அவர்களிடம் காஷ்மீரில் நிலவி வரும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து இந்திய ராணுவத்தினர் விளக்க உள்ளனர். நாளை அவர்கள் ஜம்மு சென்று துணைநிலை ஆளுநர் ஜிசி முற்மூ மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளனர்.கடந்த மாதம் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் மற்றும் வியட்நாம், தென் கொரியா, பிரேசில் உள்ளிட்ட 15 நாடுகளின் பிரதிநிதிகள் குழு ஜம்மு - காஷ்மீரின் நிலைமையை பார்வையிட்டது. அப்போது அவர்கள் ஜம்முவில் நிலவி வரும் இயல்பு நிலை குறித்து திருப்தி தெரிவித்தனர். 

Related Stories: