மாநிலங்களவையில் இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்திற்கு 2 குழந்தைகள்: தனிநபர் மசோதா தாக்கல்

டெல்லி: மாநிலங்களவையில் இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு குடும்பத்திற்கு 2 குழந்தைகள் என்ற முறையை அமல்படுத்த தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிவசேனா எம்.பி அனில் தேசாய் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஒரு குடும்பத்திற்கு 2 குழந்தைகள் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த மக்கள் தொகையினால் வருகின்ற 2050-ம் ஆண்டிற்குள் சீனாவை விட இந்தியாவின் மக்கள்தொகை அதிகரித்துவிடும் என்பதால் இந்த மசோதாவை கொண்டு வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட சிறு குடும்பத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகைகள், சமூக நலத் திட்டங்கள் மற்றும் பள்ளிச் சேர்க்கையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு அதிக வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், அரசின் சலுகைகள் வழங்கக்கூடாது என்று அந்த மசோதாவில் தெரிவித்தார்.

இந்த மசோதாவின் அரசியல் சாசன திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இரண்டு குழந்தைகள் கொண்ட சிறு குடும்ப முறையை மாநிலங்கள் பின்பற்றும் என்றும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று  தனது மசோதாவில் சிவசேனா எம்.பி அனில் தேசாய் தெரிவித்தார்.

Related Stories: