நல்ல கல்வியை விரும்பும் மக்களுக்கான வெற்றி: வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லிக்கே கிடைத்த வெற்றி இது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கல்வியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் புதுமையான அரசியலுக்கு இந்த வெற்றி வழி வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே பெரும்பான்மை இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெற்றி:

டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெற்றி பெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவில் இருந்த மணிஷ் சிசோடியா இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து டெல்லியில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்:

ஆம் ஆத்மியின் வெற்றி முகத்தை அடுத்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த ஆரவாரத்தின்போது இந்திய சமகால அரசியல் உலகில் ஒரு சாமானிய அரசியல் வாதியாக வலம் வந்து தலைநகர் டெல்லியில் 3வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி நன்றி தெரிவித்தார்.

Related Stories: