கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 1,718 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.10.37 கோடி நிவாரணம் வழங்கிட உத்தரவிடப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூரிலுள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான கோவிந்தராஜன் திலகவதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அந்தந்த நீதிமன்றத்தின் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.